குளத்தில் வெட்டி வீசப்பட்டிருந்த இளம்பெண்ணின் உடலுறுப்புகள்; அடையாளம் காணமுடியாமல் போலீஸ் திணறல்...

First Published Aug 7, 2018, 7:15 AM IST
Highlights

கோயம்புத்தூரில் உள்ள குளம் ஒன்றில் இளம்பெண் தலையில் அடித்து கொல்லப்பட்டு அவரின் உடலுறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. 

கோயம்புத்தூர் மாவட்டம், பனைமரத்தூர் பகுதியில் உள்ளது செல்வாம்பதி குளம். இங்கு போன மாதம் 25-ஆம் தேதி இளம் பெண் ஒருவரின் தலை மற்றும் கைகள் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தது. அந்த மூட்டையின் பக்கத்தில் அப்பெண்ணின் உடலின் ஒரு பாகம் மட்டும் தண்ணீரில் மிதந்து வந்துக் கொண்டிருந்தது. 

இதனை பார்த்த மக்களுக்கு சாக்கு மூட்டையிலும் உடல் பாகங்கள் இருக்குமோ?  என்று சந்தேகம் எழுந்தது. பின்னர், காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் காவலாளர்கள் சாக்கு மூட்டையைக் கைப்பற்றி அதிலிருந்த பெண்ணின் தலை மற்றும் கைகளை மீட்டனர்.

அதன்பிறகு, மற்ற பாகங்களை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி, 31-ஆம் தேதி அப்பெண்ணின் இரண்டு கால்களும் குளத்தில் மிதந்தன. இவ்வுடல் உறுப்புகளையும் காவலாளார்கள் மீட்டனர். இப்போது இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதுகுறித்து காவலாளர்கள், செய்தியாளர்களிடம் கூறியது:

செல்வாம்பதி குளத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணை, தலையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்திருக்கின்றனர் என்பது உடற்கூராய்வில் தெரிந்தது. கொன்ற பிறகு அப்பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கொண்டுவந்து குளத்தில் போட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட உடல் மற்றும் தலை அழுகி கிடந்ததால் கொல்லப்பட்ட பெண் யார்? என்று அடையாளம் காண முடியவில்லை. கொல்லப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 வயதிருக்கலாம். பெண்ணின் காலில் நீலநிற மெட்டி அணியப்பட்டு இருந்தது. இத்தகைய மெட்டியை வடநாட்டு பெண்கள் தான் அணிவர். அணிந்திருந்த உடையை வைத்து விசாரித்து வருகிறோம்.

கொல்லப்பட்ட பெண் குறித்து அடையாளம் காண கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் காணாமல்போனவர்களின் பட்டியலை வைத்து தேடி வருகிறோம். அதுமட்டுமின்றி கோயம்புத்தூரில் வசிக்கும் வடநாட்டவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.

குளத்தில் வெட்டி வீசப்பட்டிருந்த இளம்பெண்ணின் உடலுறுப்புகளை வைத்து காவலாளர்கள் தொடர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  கொல்லப்பட்ட பெண் யார்? எதற்காக கொன்றார்கள்? போன்ற தகவல்களை  திரட்டும் முயற்சியில் காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

click me!