ரேசன் கடையில் முறைகேடு; பொங்கி எழுந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்…

First Published Oct 11, 2017, 7:37 AM IST
Highlights
Ration shop abuse More than a hundred women fighting ...


திருச்சி

ரேசன் கடைகள் சரியான நேரத்தில் திறக்காமலும், அங்கு வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைந்தும் முறைகேடு நடப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி காந்தி சந்தை தாராநல்லூரை அடுத்துள்ள வெற்றிலைபேட்டை பகுதியில் இரண்டு அமராவதி கூட்டுறவு ரேசன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேசன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இந்தக் கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை.

கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட ரேசன் பொருட்களின் எடை அளவு குறைவாக உள்ளது.

மேலும், ஊழியர்கள் அல்லாத தனிப்பட்ட நபர்களை வைத்து பொருட்கள் எடை போடப்பட்டு வழங்கப்படுகிறது.

அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் வேண்டுமென்றால் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறி பொருட்களும் வாங்க வேண்டும் என்று ஊழியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.

இவை அனைத்தையும் கண்டித்து அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ரேணுகா தலைமையில் நேற்று அந்த ரேசன் கடைகளில் ஒன்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காந்தி சந்தை காவலாளர்கள், திருச்சி கிழக்கு தனி தாசில்தார் (வட்ட வழங்கல் அதிகாரி) முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாசில்தார், “இந்த ரேசன் கடைகளில் உள்ள பிரச்சனைகள் இனிமேல் நடைபெறாது” என்று எழுத்துப் பூர்வமாக ஒரு தாளில் எழுதி போராட்டம் நடத்திய பெண்களிடம் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பெண்கள் அமைதியாக கலைந்துச் சென்றனர். பின்னர், அந்த ரேசன் கடைகளில் வழக்கம்போல பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 

click me!