சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமா..? ஆட்குறைப்பு நடவடிக்கையா..? சீறிய ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Aug 7, 2022, 11:06 AM IST
Highlights

பேருந்துகளுக்கான ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும்.தமிழக அரசின் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்ற பெயரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்

பேருந்துகள் தனியாரிடமா?

சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும். சென்னையில் போக்குவரத்து சேவை, நடைபாதை கட்டமைப்புகள், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு உலக வங்கி ரூ.12,000 கடன் வழங்கும். இத்திட்டத்தின்  ஓர் அங்கமாக சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம் தான் புதிய பேருந்துகளை இயக்கும்.புதிய பேருந்துகளை தனியார் நிறுவனத்தின் ஓட்டுனர், நடத்துனர்கள் தான் இயக்குவர். அவற்றுக்கு மாதம் ஒரு தொகையை போக்குவரத்துக் கழகம் வாடகையாக செலுத்தும். இந்த முறைப்படி 2022&ஆம் ஆண்டில் 500 பேருந்துகளையும், 2024&ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளையும் இயக்குவதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. 

நிர்வாணப்படுத்தி அடிக்கிறாங்க..! அலறி துடிக்கும் ஹரி நாடார்...! மனைவிக்கு பரபரப்பு கடிதம்

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வாய்ப்பு

இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதை தமிழக அரசும் போக்குவரத்துத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறது.  அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை. முதலில் சென்னையிலும், பின்னர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மொத்த செலவு ஒப்பந்த முறையை (Gross Cost Contract) நீட்டிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும். அடுத்தக்கட்டமாக ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் போது, அவையும் இதே முறையில் இயக்கப்படும். அத்தகைய சூழலில் அந்த பேருந்துகளுக்கான ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும்.தமிழக அரசின் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் போது, இனி வரும் காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்படாது; புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.  அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் என்ற பெயரில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும்; இலவச, மானியக் கட்டண சலுகைகள்  தொடரும் என்றாலும் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவையும் திரும்பப் பெறப்படக் கூடும். மொத்த செலவு ஒப்பந்த முறையை செயல்படுத்துவதன் மூலம் புதிய பேருந்துகள், அவற்றுக்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கான முதலீடு தேவைப்படாது; ஊதியச் செலவுகள் குறையும் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது. 

கருணாநிதி நினைவு நாள்...! அமைதி பேரணியில் ஸ்டாலின்...நினைவிடத்தில் மரியாதை.

தமிழக அரசு கை விட வேண்டும்

மாநகரப் போக்குவரத்துக் கழகம்  உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் நேரடியாக இயக்கும் பேருந்துகளை விட, தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது,  கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அப்போது அதை தீர்க்க முடியாமல் அரசு தடுமாற நேரிடும். உலகில்  மிகச்சிறப்பான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்டிருக்கும் பெரு நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும்.  50 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தையும், பின்னர் படிப்படியாக பிற போக்குவரத்துக் கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

மகிழ்ச்சி செய்தி !! ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே சிறப்பு இரயில்.. எப்போது இருந்து..? ரயில்வே அறிவிப்பு

click me!