கேட்டதும் கிடைக்க இட ஒதுக்கீடு சுக்கோ,மிளகோ இல்லை..! வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்- ராமதாஸ் சபதம்

By Ajmal KhanFirst Published Sep 16, 2022, 11:35 AM IST
Highlights

கேட்டவுடன் கிடைத்து விடுவதற்கு சமூகநீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ அல்லவே. அதற்காக பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் கடந்து தான் வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இட ஒதுக்கீடு போராட்டம்

தியாகிகள் சிந்திய ரத்தம் வீண் போகாது, வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்! என பாமக நிறுவனர் ராமதஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட  பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-ஆவது நினைவு நாள் நாளை. இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில்  ஈடு இணையற்ற தியாகம் செய்த, காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்கள் 21 பேருக்கும் நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன். உரிமை கேட்டு நாம் நடத்திய போராட்டத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு, கொடூரத் தாக்குதல்கள் ஆகியவற்றில் 21 சொந்தங்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் அமைச்சர்களின் கமிஷன்.? ஒன்றரை ஆண்டில் 50ஆயிரம் கோடி கொள்ளை- எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

சமூகநீதி பயணத்தில் வெற்றி ஆண்டு

தொடர் சாலைமறியல் போராட்டத்திற்கு பிறகு தான் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அழைத்து பேசினார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் நம்மை அழைத்துப் பேசி 108 சமுதாயங்களை இணைத்து  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அதிலும் நமக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில் தான் 2020-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கினோம். அதன் பயனாக 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அதன்பின் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு நமது சமூகநீதி பயணத்தில் வெற்றி ஆண்டாக அமைந்தது. அதனால், கடந்த ஆண்டு  இட ஒதுக்கீட்டு ஈகியர்களின் நினைவு நாளில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினோம்.

மீண்டும் ஒன்று சேர்வதா...? வாய்ப்பே இல்லை... கானல் நீரை போல் கரைந்து போய்விடுவிங்க- இபிஎஸ் ஆவேசம்

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

காலம்காலமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த சமுதாயம், போராடி, உயிர்த்தியாகம்  செய்து சமூகநீதியை வென்றெடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட 50 அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிமன்றமும் சட்டத்தின்படியாக அல்லாமல், உணர்வுகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்து வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று  தீர்ப்பளித்தது. அப்போது நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதி.... ‘‘எப்பாடு பட்டாலும் வன்னியர்களுக்கான  இட ஒதுக்கீட்டை மீண்டும் வென்றெடுத்துக் கொடுக்காமல் ஓயமாட்டேன்’’ என்பது தான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத் தான் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஓயாமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் ஒட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது. உச்சநீதிமன்றமும் நமது மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்து, வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.

சுக்கோ, மிளகோ இல்லை

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை மாதங்கள் கடந்து விட்டன; மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு  இல்லை; கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்  இட ஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை. உங்கள்  கவலைகளை நானும் உணர்கிறேன். அதைப் போக்க அனுதினமும் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். கேட்டவுடன் கிடைத்து விடுவதற்கு சமூகநீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ அல்லவே. அதற்காக பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் கடந்து தான் வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுவதாக ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறை எது..? ரூ. 1 கோடி பரிசு...ஸ்டாலினை அதிரவைத்த மாஜி அமைச்சரின் கணவர்

click me!