
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பாலைவனம் (திருப்புவனம்) ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பார்வதி மற்றும் நடராஜர் சிலைகளை மீட்பதில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் ஏல மையத்தில் பார்வதி சிலை சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு வந்துள்ளதாகவும், நடராஜர் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள நமது சிலைகளை மீட்க அரசு எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் இருந்து இதுவரை 83-க்கும் மேற்பட்ட சிலைகள் இதுபோல கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.