
தமிழகம் முழுவதும் கடும் வெயிலும் வறட்சியும் போட்டுத் தாக்கி வரும் நிலையில் கோவை, நெல்லை , திண்டுக்கல், ராமநாதபுரம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது .இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து தமிழகத்தை குளிர்வித்து வருகிறது..
கோவை மாவட்டம் துடியலுார் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு இடியுடன் கன மழை பெய்தது. பொள்ளாச்சி, மேட்டுப்பளையம், கோவை துடியலுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றினால் மேட்டுப்பாளையம், ஊட்டி மெயின் ரோடு கள்ளாறு ரயில்வே கேட் அருகே ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
இதனால் மேட்டுபாளையம் - ஊட்டி சாலை துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் இடியுடன் கன மழை பெய்தது.
நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், புளியரை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை விழா தொடங்கவுள்ள நிலையில் அங்கு பெய்து வரும் மழையால் இதமான சூழல் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.