தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு மேலாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்து பரவலாக மழை கொட்டி வருகிறது.
கோவை, நீலகிரி, தென்காசி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இரவு, பகல் என்று பாராமல் பலத்த மழை கொட்டியது. நேற்றிரவும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந் நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அதன் எதிரொலியாக இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் அனேகமாக அனைத்து இடங்களிலும் மழை பெய்யலாம்.
இன்றைய தினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நாகை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை கொட்டும். தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.
நாளையும், சனிக்கிழமையும் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டும். வரும் ஞாயிறன்று சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, விருதுநகா, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம்.
தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த வீசக்கூடும். எனவே மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க கடலுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.