
பிள்ளையார் சிலை அகற்றமா.?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த வாரம் பொறுப்பேற்றார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 60 ஆண்டு காலமாக இருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பாஜக பொறுப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து இது குறித்து விளக்கம் அளித்தார்.மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்படவில்லையென்றும் பிள்ளையார் சிலை உடையவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சிலை தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்படும் என மாவட்ட அட்சியர் உறுதி அளித்தார். ஜாதி மத அடையாளம் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த விளக்கத்தை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது பொய் செய்தி பரப்பியவர்கள் விரைவில் கது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்