
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசி, சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டம் போடபப்ட்டது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பப்ஜி மதன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனால் பப்ஜி மதன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பப்ஜி மதன் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பு வழக்கறிஞர் தரப்பில் பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின்படி அவருக்கு 3 மாதம் தான் தண்டனை வழங்க முடியும். ஆனால் அவர் ஒன்பதரை மாதங்களாக சிறையில் உள்ளதாக வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் மதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார்.அப்போது காவல்துறை தரப்பில், மதனின் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஒரு வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் படிக்க: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கணும்.! மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் கொடுத்த ஷாக் !!