வேளச்சேரியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - போராட்டத்தில் குதித்த பெண்கள்!!!

First Published May 20, 2017, 12:32 PM IST
Highlights
protest against tasmac in velachery


தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அனைத்து மாநிலங்களிலும் மதுக் கடைகள் அகற்றப்பட்டன.

இதைதொடர்ந்து, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகள் குடியிருப்பு மற்றும் நகர் பகுதிகளில் புதிதாக திறக்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாள் தோறும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது, அங்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார், பொதுமக்கள் மீது தடியடி நடத்துகின்றனர். குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், போலீசாரிடம் இந்த நடவடிக்கையால் போராட்டம் ஓயவில்லை. மாறாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. போலீசார் தாக்கினாலும், மீண்டும் பெண்களே போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து 100க்கு மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் இன்று மதியம் 11 மணியளவில் டாஸ்மாக் கடை முன் திரண்டனர். அங்கு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும், டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட கலெக்டரை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

click me!