பெரம்பலூர்
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட ரூ. 1 இலட்சம் மதிப்பிலான போதை பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து அவற்றை தீயிட்டு எரித்தனர்.
புகையிலை போதை பொருள்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றிய விற்பதற்கும் பெருமளவு தடையை விதித்து அதனை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்கப்படுகிறது என்ற தகவல் உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு கிடைத்தது.
அதனை உறுதி செய்யவும், தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பவர்களை கையும் களவுமாக பிடிக்கவும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியில் இறங்கினர்.
அதன்படி, பெரம்பலூர் பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலைய வளாகம், பள்ளிவாசல் தெரு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் சமீபத்தில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த கடைகளில் பதுக்கி வைத்து விற்கப்படும் 65 கிலோ பாக்கு வகைகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் என மொத்தம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான போதை பொருள்களை அதிகார்கள் பறிமுதல் செய்தனர். விற்பனையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தப் பொருள்களை, பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி தீயிட்டு எரித்தனர்.