
கோவில்பட்டி,
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவில்பட்டி – மந்திதோப்பு சாலை சர்க்கஸ் மைதானத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் தலைமைத் தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் செல்லமுத்து, பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநில மகளிர் அணி தலைவி ராஜரீகா, பாலசுப்பிரமணியன், தம்பை சண்முகம், பொன் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலில் வறட்சியின் கொடுமை தாங்காமல் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வறட்சி நிவாரண தொகையை அரசு ஏக்கருக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்,
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,
விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக உடனே வழங்க வேண்டும்,
அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி அவற்றை இணைக்க வேண்டும்,
ஏரி, குளங்களை தூர்வாரி, நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,
பம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசிற்கும், பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசிற்கும் கண்டனம் தெரிவிப்பது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் கீரியாறு நீர்த்தேக்க திட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்,
கோவில்பட்டியில் இரண்டாவது குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்
போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.