
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகனையும், சிறுமியின் தந்தையையும் காவலாளர்கள் கைது செய்தனர். குழந்தைகள் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
தூத்துக்குடி நடராசபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சுப்ரமணியன் (27). கூலித் தொழிலாளி. இவருக்கும், கிருஷ்ணராசபுத்தைச் சேர்ந்த 15 வயதான் பிளஸ்–1 மாணவிக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தது. இதனால் மாணவியின் படிப்பைக் கடந்த மாதத்துடன் நிறுத்தியுள்ளனர் இவரது பெற்றொர்கள்.
நேற்று காலையில், தூத்துக்குடி பாரத வங்கி காலனியில் உள்ள கருப்பசாமி கோவிலில் வைத்து சுப்ரமணியனுக்கும், அந்த மாணவிக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு தனியார் திருமண மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பள்ளிக்கூட மாணவிக்கு திருமணம் நடந்ததாக ‘சைல்டுலைனுக்கு’ (குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி சேவை மையம்) புகார் வந்தது.
அந்த புகாரின் பேரில் தூத்துக்குடி தாசில்தார் சங்கரநாராயணன், சமூகநலத்துறை இளநிலை உதவியாளர் ஆதாள் தனபாக்கியம், ‘சைல்டுலைன்’ ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், உறுப்பினர்கள் சங்கரி, செல்வராணி, மத்தியபாகம் காவல் ஆய்வாளர் வனசுந்தர் மற்றும் காவலாளர்கள் அந்த தனியார் திருமண மண்டபத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அந்த மாணவிக்கு 15 வயதுதான் என்பதும், குழந்தைத் திருமணம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியை மீட்டு, தூத்துக்குடி குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் நொய்லின் பாத்திமா ராணி முன்பு சமர்ப்பித்தனர். பின்னர் அவர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அதே நேரத்தில் மாணவியை திருமணம் செய்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவலார்கள், மணமகன் சுப்பிரமணியன், மாணவியின் பெற்றோர் மகராஜன் (48), மணிசெல்வி, பாட்டி ஐயம்மாள் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சுப்பிரமணியன், மகராஜன் ஆகிய இராண்டு பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் வெளியேறி சென்றனர். இதனால் மண்டபம் வெறிச்சோடியது.