முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கூடாது - இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தல்...

First Published Jan 6, 2018, 10:11 AM IST
Highlights
President should not approve the triple thalaq Bill of Legislation - Continuing to emphasize Islamic organizations...


தஞ்சாவூர்

மத்திய அரசின் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கூடாது என்று இஸ்லாமிய அமைப்பினர் தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டார உலமா சபை, ஜமாத் சபையினர் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் முத்தலாக் தடை மசோதா எதிர்ப்பு கண்டன கூட்டம் ஐயம்பேட்டை மதகடி பஜாரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஜமாத் சபை துணைத் தலைவர் பி.எம்.ஜியாவுதீன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் இனையத்துல்லா, ஜமாத் சபை தலைவர்கள் முகமதுநஜிப், அக்பர்பாட்சா ஆகியோர் பேசினர்.

இதில் பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி, வழுத்தூர், சக்கராப்பள்ளி, ஐயம்பேட்டை, பசுபதிகோவில், வடக்குமாங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமாத்தார்கள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவை வன்மையாக கண்டிப்பது,

இஸ்லாமியர்களிடம் கலந்து ஆலோசனை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே மத்திய அரசு முத்தலாக் தடை சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்,

பாராளுமன்ற மரபுகளுக்கு எதிராக அவசர கதியில் கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது,

மத்திய அரசு இந்திய நாட்டின் இறையாண்மையை கேள்விகுறியாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும்,

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவைக்கு தனியான சட்டங்கள் உண்டு. இவற்றில் தலையிடுவதன் மூலம் மத்திய அரசு தன்னுடைய ஒற்றை கலாசார திட்டத்தை திணிக்க முயற்சிப்பதை கண்டிப்பது" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஐயம்பேட்டை தலைமை இமாம் அபுபக்கர் சித்திக் நன்றித் தெரிவித்தார்.

click me!