
இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது என்று சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
ஆண்டு தோறும் ராணுவத்துறையில் சிறந்த சேவை, நவீன தொழில்நுட்பத்தை கையாள்வது, சிறந்த பயிற்சி பெறும் பிரிவினருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது.
இதையொட்டி இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா இன்று, தாம்பரத்தில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான ராணுவ பயிற்சி மைதனாத்தில் நடந்தது. இதில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அவருக்கு விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பின்னர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் விமானப்படை சிறந்து விளங்குகிறது. இந்த நிகழ்ச்சி நாட்டுக்காக தன்னையே அர்ப்பணிக்கும், உணர்வுடன் பணியாற்றும் குடிமகனின் நிகழ்ச்சியாகும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை கொண்டது நமது இந்திய ராணுவப்படைகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டிற்காக அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் வீரர்களை போற்றும் நிகழ்ச்சி இது என்றவர் இந்திய ராணுவப்படைகள் எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடியவை என்று கூறினார்.
முன்னதாக ‘125’ ரக ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் எம்.ஐ.டி. எனும் மெக்கானிக்கல் பயிற்சி மைய பிரிவுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் அடையாரில் நடைபெறும் இந்திய பெண்கள் விழாவிலும் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.
இதன் பின்னர் மதியம் 1.15 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.