காவல்நிலையத்தில் பொங்கல் விழா.. புது ஆடையில் பொங்கலோ பொங்கல் கொண்டாடிய போலீஸ்..

By Thanalakshmi VFirst Published Jan 14, 2022, 8:13 PM IST
Highlights

அன்னூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை உடுத்தி, பானையில் புத்தரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி காவல் துறையினர் மகிழ்ந்தனர் .
 

உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் விரும்பி கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்நன்னாளில் புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது நமது பாரம்பரியம்.அதன் ஒருபகுதியான இடைவிடாத பணிச்சுமையிலும் காவல் துறையினர் தங்களது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காவலர்களிடையே நிச்சயம் மனச்சுமையினை குறைக்கும் என்பதில் மாற்றமில்லை. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அன்னூர் காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் நித்யா,உதவி ஆய்வாளர்கள் சிலம்பரசன், வெங்கடேஸ் மற்றும் காவலர்கள் தங்களது வழக்கமான காக்கி சீருடையை அணியாமல் கொண்டாட முடிவு செய்தனர். அதாவது, தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண் போலீசார் வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார் சேலை அணிந்தும் கலந்து கொண்டனர். 

காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பானையில் பொங்கலிட்டு அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து பாரம்பரிய மிக்க நாட்டு மாட்டு வண்டியில் அவர்கள் பயணம் செய்தும், மாடுகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்தனர். இதனையடுத்து கடவுளுக்கு படைத்த பொங்கலை சக காவலர்களுக்கும், அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்தும் பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சியின் இறுதியாக குழுவாக புகைப்படம் எடுத்தும், பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டும் உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர்.

click me!