சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கலைச்செல்வன் இன்று இறந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் வக்கீலக பணியாற்றி வந்துள்ளார். பிற்பகல் 3 மணியளவில் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது.
இவரது மரணத்திற்கு வெளியூரில் இருந்து 3 சிற்றுந்துகளில் 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களில் ஒரு சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.
பட்டாசு வெடித்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே செல்வம் என்பவரின் மளிகை கடை இருந்துள்ளது. மளிகை கடையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்ததால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று செல்வம் தடுத்துள்ளார்.
அப்போது செல்வத்திற்கும், பட்டாசு வெடித்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. செல்வத்திற்கு ஆதரவாக அவரது மகன்கள் அன்பு, ஜெகதீசன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் முருகன் ஆகியோர் வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 3 சிற்றுந்துகள் அடித்து உடைக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய வெளியூரை சேர்ந்தவர்கள் அனைவரையும் கைதுசெய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 10க்கும் மேற்பட்டோரை பிடித்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.