அதிர்ச்சி..! நாடகமாடிய ரயில்வே ஊழியர்..பொறிவைத்து பிடித்த போலீஸ்.. திருவான்மியூர் கொள்ளையில் ட்விஸ்டு..

By Raghupati RFirst Published Jan 4, 2022, 8:09 AM IST
Highlights

திருவான்மியூர் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியரைக் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ரூ1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். 

தலைநகர் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். எழும்பூர் ரெயில்வே டிஎஸ் பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரெயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என ரெயில்வே போலீசார் சந்தேகித்தனர்.  இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லாததால் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது,கொள்ளை நடைபெற்ற குறிப்பிட்ட நேரத்திற்குள் பெண் ஒருவர் வந்து செல்ல கூடிய காட்சி இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் அந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது,அவர் டிக்கெட் கவுன்டர் ஊழியர் டீக்காரம் மனைவி என்பது தெரிய வந்தது.உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது தான்,தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுன்டர் ஊழியர் டீக்காரம் கொள்ளை நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியது.

இதன்காரணமாக, கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,கொள்ளைப்போன ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!