கூகுள் பே பயனாளரா நீங்க... உஷாரா இருங்க... உங்களுக்கான அட்வைஸ் இதுதான்..

By Raghupati RFirst Published Jan 4, 2022, 6:39 AM IST
Highlights

‘கூகுள் பே’ மூலம் சிம் ஸ்வாப் என்ற முறையில் மோசடி செய்து பல லட்ச ரூபாய் கொள்ளையடித்த கும்பலை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார். 

‘யூபிஐ’ எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வரும் நிலையில், சென்ற டிசம்பர் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. யூபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 456 கோடியாக உயர்ந்துள்ளது. 2021 அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 421 கோடியாக இருந்தது. 

மதிப்பு அடிப்படையில், 2021 டிசம்பர் மாதத்தில் ரூ.8.27 கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. சென்ற ஆண்டில் கொரோனா பரவல் அச்சம் இருந்ததால் பெரும்பாலானோர் சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக ரொக்க பரிவர்த்தனைகளைக் குறைத்து,  டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மேற்கொண்டனர். இதன் காரணமாகவும் டிஜிட்டல் பரிவத்தனைகள் அதிகரித்துள்ளதாக வங்கித் துறையினர் தெரிவித்துள்ளனர். 

2021 முழு ஆண்டில் மொத்தம் 3,800 கோடி யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.73 லட்சம் கோடியாகும். நாளுக்கு நாள் கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல்வேறு செயலிகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை பயன்படுத்தி குற்ற செயல்களும் அதிகரித்தே வருகின்றன.

கூகுள் பே மூலம் மோசடி செய்யப்பட்டதில் 24 லட்ச ரூபாயை இழந்ததாக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. 

சில ரகசிய தகவலின் படி வடமாநில கும்பலைச் சேர்ந்த ரோகன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மேற்கு வங்காளத்திலிருந்து கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ‘செல்போன் எண்களை மட்டும் வைத்து மற்றொரு சிம்கார்டை ஆக்டிவேட் செய்து, அந்த எண்ணின் தொடர்பான வங்கிக் கணக்கு மற்றும் கூகுள் பே மூலம் பணத்தை கும்பல் கொள்ளையடித்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

click me!