கதிராமங்கலம் தடியடி எதிரொலி - ஆளுநர் மாளிகை,தலைமை செயலகம் முன்பு போலீசார் குவிப்பு

First Published Jul 2, 2017, 4:30 PM IST
Highlights
police force in raj bhavan


கதிராமங்கலம் கிராமத்தில் கச்சா எண்ணெய் கசிவு காரணமாக போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்கள், சென்னையில் ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பாஜக அலுவலகங்களை முற்றுகையிடப்போவதாக வந்த தகவலை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை, கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு பகுதியில் இருந்து குத்தாலத்துக்கு செல்லும் குழாயில் நேற்று கசிவு ஏற்பட்டு வெளியேறிய கச்சா எண்ணெய் திறந்த வெளியில் ஓடி, அப்பகுதி வயல்களில் பரவியது. அப்பகுதி முழுவதும் ரசாயன நெடி வீசியது. இதனால், அச்சமடைந்த கதிராமங்கலம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

தகவலறிந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் எண்ணெய்க் குழாய் கசிவை சரிசெய்ய கதிராமங்கலம் வந்தபோது, அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில் கதிராமங்கத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக, சாலையில் முள்செடிகளை போட்டு தடுப்பு அமைத்திருந்தனர். 

சாலையில் கிடந்த முட்செடிகளை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால், அது கொழுந்து விட்டு எரிந்தது. தீயை அணைப்பதற்காக போலீஸார் சென்றபோது, பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். ஆத்திரமடைந்த போலீஸார் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பெண்கள், பொதுமக்கள் வயல்வெளிப் பகுதியில் நான்கு புறமும் சிதறி ஓடினர். 

பொதுமக்கள் கல்வீசித் தாக்கியதில், திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவலர் செந்தில் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியதாலும், பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாலும் கதிராமங்கலம் கலவர பகுதியாக மாறியது.

இந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பாஜக அலுவலகத்தை, கதிராமங்கல கிராம மக்கள் முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது. 

இதனை அடுத்து ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தலைமைச் செயலகம், பாஜக அலுவலகங்கம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!