ஜல்லிக்கட்டு பாணியில் மெரினாவில் போராட்டம் - வாட்ஸ் அப் அழைப்பால் போலீஸ் குவிப்பு!!

First Published Jul 1, 2017, 11:16 AM IST
Highlights
police force in marina


கடந்த ஜனவரி மாதம், சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நடந்த இந்த போராட்டம், உலகையே திரும்பி பார்க்க செய்தது.

போலீஸ் உயர் அதிகாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், போராட்டத்தை யாரும் கைவிடவில்லை.இதனால், 15 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து மெரினா கடற்கரை ஆர்ப்பாட்டத்துக்கான இடமாக மாறியது.

இதைதொடர்ந்து போலீசார், மெரினா கடற்கரையில் கூட்டமாக சேர்ந்து வருபவர்களையும், ஆர்ப்பாட்டம் நடத்த வருபவர்களையும் தடுத்து திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

இதையொட்டி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நெடுவாசல் கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மெரினாவில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதை அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தவர்களை எச்சரித்து, திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், கதிராமங்கலம் கிராமத்தில் நடந்த போராட்டத்தில், பொதுமக்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக, கடந்த ஜனவரியில் நடந்த அறப்போராட்டம் போல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வாட்ஸ்அப் மூலம் செய்தி வைரலாக பரவி வருகிறது.

அந்த செய்தியில், “தோழா பொறுத்தது போதும்.. வா நாம் மறுபடியும் கூடுவோம் மெரினாவில் !! நேற்று நெடுவாசல், இன்று கதிராமங்கலம் நாம் என்ன அடிமைகளா ?? காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி நம்முடைய மக்களை அடிப்பதை பார்த்து கொண்டு நாம் இனியும் சும்மா இருந்தால் நாம் தமிழன் என்று சொல்வதற்கு அர்த்தமே இல்லை.

நம் விவசாயிகளையும் மக்களையும் கதிராமங்கலத்தில், இந்த மனிதாபிமானமற்ற தமிழக அரசு, காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.

இனியும் பொறுக்க முடியாது வா தோழா, மறுபடியும் தமிழன் யார் என்று இந்த உலகுக்கு காட்டுவோம், மெரினாவில் ஒன்று கூடுவோம்… இனியொரு விதி செய்வோம், விதியினை மாற்றும் விதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி அறிந்ததும், இன்று காலை முதல் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருப்பு நிற சட்டை, டிசர்ட் அணிந்து யார் வந்தாலும், அவர்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். கூட்டமாக வருவோரையும் விசாரித்து அனுப்பி வைக்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் பரபரப்பு நிலவுகிறது. 

click me!