விடுதலை செய்யப்படுவாரா பேரறிவாளன்? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

By Narendran SFirst Published May 17, 2022, 9:59 PM IST
Highlights

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விசாரணையில் அரசமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டது. தமிழக அரசும், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. சிஆர்பிசி சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்கவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதனிடையே இன்னும், சில நாட்களில் உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ள நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தீர்ப்பு ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் நாளைய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதோடு எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

click me!