
கோயம்புத்தூர்
தண்ணீர்க் கேட்டு கரப்பாடியில் மக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் சுமார் 2 மணிநேரம் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஏ.நாகூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரப்பாடி கிராமம். இங்கு வசிக்கும் மக்களுக்கு கரப்பாடிக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வாரத்துக்கு மூன்று நாள்கள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
மேலும் அங்குள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகள் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது மழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கரப்பாடியில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளில் ஒன்று தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. ஒரு ஆழ்துளை கிணறு மூலமே தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதில் தண்ணீர் இருந்தும் போதிய அளவு குழாய்கள் அமைக்கப்படாததால் கிராமத்தின் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் வழங்க முடியவில்லை.
இதனிடையே அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் குடிநீர் வழங்கக்கோரி கரப்பாடியில் கிராம மக்கள் வெற்றுக் குடங்களுடன் நேற்று திடீரென்று நெகமம் சாலையில், மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது “அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வரும் குழாயில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரி செய்தவுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
மேலும் கரப்பாடியில் இரண்டு ஆழ்துளை கிணறுகளில் ஒரு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. மற்றொரு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைதிப்படுத்தினர்.
இதில் சமரசம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக கரப்பாடி – நெகமம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.