
விழுப்புரம்
விழுப்புரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கை சரியாக காட்டததால் மக்கள், கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை ஊராட்சியில் நேற்று காலை மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், கடந்த ஒரு வருடத்திற்கான வரவு, செலவை தாக்கல் செய்யும்படி மக்கள் கேட்டனர். அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர், சரியாக கணக்கு காட்டவில்லை.
இதனால் ஆவேசமடைந்த மக்கள், பகல் 12 மணியளவில் திடீரென கிராம சபை கூட்டத்தை புறக்கணித்திவிட்டு அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சியில் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் சரிவர கணக்கு காட்டுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இந்த மறியலால் விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கெடார் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜீவராஜமணிகண்டன் மற்றும் காவலாளர்களும், காணை வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.