
செம்பட்டி,
செம்பட்டி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் வாகன நிறுத்தத்தால் ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று புகார் அளித்துள்ளனர் பொதுமக்கள்.
திண்டுககல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருசக்கர வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, செம்பட்டியில் இருந்து வெளியூர் செல்பவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த வாகனநிறுத்தத்தை அனுமதியின்றி ஒருவர் நடத்தி வருவதாகவும், இதனால் பச்சமலையான்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி, செம்பட்டி பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி செயல்படும் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டார்.
எனினும் அவர் வாகன நிறுத்தத்தை அகற்றாமல், வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
இதையடுத்து செம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்தார். அதன் பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி செயல்படும் இருசக்கர வாகன நிறுத்தத்தில் பொதுமக்கள் யாரும் தங்கள் வாகனங்களை நிறுத்தககூடாது என்ற அறிவித்து, செம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் அறிவிப்பு பலகை ஒன்றை அதிகாரிகள் வைத்துள்ளனர்.