மேரி மாதாவாக மாறிய மாரியாத்தா… பண்ருட்டி அருகே பதற்றம்...!

By vinoth kumarFirst Published Dec 26, 2018, 2:07 PM IST
Highlights

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை கோயிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதாவைபோல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை அறிந்ததும, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். 

உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் பாஜக மண்டல பொறுப்பாளர் சக்தி கணபதி, கோட்ட பொறுப்பாளர் சுகுமார், அய்யப்ப பாதுகாப்பு மன்ற மாவட்ட தலைவர் நாராயணன், இந்து மக்கள் முன்னணி தேவா ஆகியோர் முன்னிலையில் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தகவலறிந்து பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, எஸ்ஐ ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் நடத்தியவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோயிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. 

இதன் பின்னர் போலீசார் கோயில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோயில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

click me!