
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கெனவே இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுகவின் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், இவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், டிடிவி தினகரன்
இபிஎஸ் கூட்டணியில் இருக்கிறார் என்ற ஆணவத்தில் தமிழக பாஜக தலைவர் நயினர் நாகேந்திரன் தங்களை மதிக்கவில்லை என்று இருவரும் குற்றம்சாட்டியிருந்தார்கள். அதே வேளையில் இருவரும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியிருந்தனர். எடப்பாடி துணை முதல்வர் வேட்பாளராக இருந்தால் பாஜக கூட்டணியில் ஒருபோதும் சேர மாட்டேன் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
டிடிவியை சந்தித்த அண்ணாமலை
ஓபிஎஸ்ஸும், டிடிவியும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி வைத்திருப்பதால் இருவரையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும்படி தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனின் வீட்டுக்கு நேரடியாக சென்ற அண்ணாமலை, அவரை சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
டிடிவி மறுப்பு
நெருங்கிய நண்பரான அண்ணாமலை கோரிக்கை வைத்ததால் டிடிவி மீண்டும் பாஜக கூட்டணி செல்வார் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன், எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
மீண்டும் கூட்டணிக்கு செல்ல மாட்டேன்
''மீண்டும் கூட்டணிக்கு வரும்படி நலம் விரும்பிகள், பலர் கேட்டுக் கொண்டனர். எங்களுக்கு துரோகம் செய்த பழனிசாமிக்கு எங்களை சந்திக்க எப்படி தைரியம் வரும்? அவருக்கு தயக்கம் இருக்கும். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருந்தால் அந்த கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று நான் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். அண்ணாமலையும் என்னிடம் மீண்டும் கூட்டணிக்கு வாருங்கள் என்றார். என்னை டெல்லிக்கு அழைத்து சென்று சமாதானம் செய்யும்படி சிலர் நினைத்தார்கள். எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு பதில் அளித்த ஓபிஎஸ்
முன்னதாக, டிடிவியை சந்தித்து விட்டு வந்த அண்ணாமலை, மீண்டும் கூட்டணிக்கு வரும்படி ஓபிஎஸ்ஸை சந்தித்தும் கோரிக்கை விடுப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்ஸிடம், 'அண்ணாமலை கோரிக்கை விடுத்தால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்வீர்களா' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், 'தற்சமயம் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை' என்று தெரிவித்தார்.
யார் வீட்டு வாசலில் போய் இருந்தார்கள்
மேலும் அதிமுகவின் சி.வி.சண்முகம் 'பிரிந்து சென்றவர்களை மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்க்க கூடாது' என்று கூறியிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், 'யார் போய் அவர் வீட்டு வாசலில் போய் நின்றார்கள்' என்றார். ஓபிஎஸ்ஸின் இந்த கருத்து அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல தயக்கம் காட்டுவதையே காட்டுகிறது. இதனால் டிடிவியை தொடர்ந்து ஓபிஎஸ்ஸின் கருத்தாலும் அண்னாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார்.