சிவகங்கையில் பக்தியோடு கோயிலுக்கு பைக்கில் புறப்பட்டவர்கள் மீது அரசுப் பேருந்து மின்னல் வேகத்தில் மோதியது. இதில், பெண் ஒருவர் பலியானார். நால்வர் பலத்த காயத்தோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, கிழக்காட்டுச் சாலை, ஆர்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் பொன்னுத்தாய் (50). இவர் குடும்பத்தோடு திருப்பத்தூர் அருகேவுள்ள வைரன்பட்டியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்றனர். மொத்தம் இரண்டு மோட்டார் பைக்குகளில் குழந்தைகள் உள்பட மொத்தம் 6 பேர் சென்றனர்.
அதன்படி, முதல் பைக்கில் பேச்சியப்பன், பொன்னுத்தாய் சென்றனர். மற்றொரு பைக்கில் பொன்னுத்தாயின் மகள் திருமலைக்குமாரி, உறவினர் விஜி மற்றும் ஜனனி, பிரியதர்ஷினி என்னும் இரண்டு குழந்தைகள் சென்றனர்.
திருப்பத்தூர் சாலையில் உள்ள சிவபுரிப்பட்டி வகுத்துப் பிள்ளையார் கோயில் அருகே பைக்குகள் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது விஜி ஓட்டிவந்த பைக்கின் மீது, காரைக்குடி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து படுவேகமாக மோதியது. இதில், பைக்கில் சென்ற நால்வரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
பின்னால் வந்துக் கொண்டிருந்த பைக் வேகமாக பிரேக் அடித்ததில் கீழே சரிந்தது. இதில், பொன்னுத்தாய் காயம் அடைந்தார். இவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் கொண்டுச்சென்று சேர்த்தனர்.
அங்கு விஜி மற்றும் இரண்டு குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருமலைக்குமாரி மற்றும் பொன்னுத்தாய் இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். ஆனால், போகும் வழியிலேயே திருமலைக்குமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் சிங்கம்புணரி காவலாளார்கள் வழக்குப்பதிந்தனர். மேலும், இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பேச்சியப்பனிடம் விசாரித்து வருகின்றனர்.