10,000 டன் நெல் நாசம்... அலட்சியமான அதிகாரிகளால் தமிழக அரசுக்கு இத்தன கோடி இழப்பு!!

By Narendran SFirst Published Jan 3, 2022, 8:46 PM IST
Highlights

தஞ்சையில் மழையில் நனைந்து 10,000 டன் நெல்கள் வீணாக கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு ரூ. 1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தஞ்சையில் மழையில் நனைந்து 10,000 டன் நெல்கள் வீணாக கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசுக்கு ரூ. 1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில்  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 66 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுக்கா பகுதிகளில் மட்டும் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். இதையடுத்து  அறுவடை செய்த குருவை நெல்களை  நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள்  கொள்முதல் செய்தனர்.  கும்பகோணம், திருவிடைமருதூர் பாபநாசம் வட்டாரத்தில் மட்டும் 3 லட்சத்து 48 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கும்பகோணம், சோழன் மாளிகை, சுவாமிமலை, திருப்புறம்பியம், பட்டீஸ்வரம், தாராசுரம், சோழபுரம், திருப்பனந்தாள்,ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல்மணிகள் அனைத்தும் திருநாகேஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து ரயில்கள், லாரிகள் மூலம் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருநாகேஸ்வரத்தை அடுத்த சன்னாபுரம் கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால்  திருநாகேஸ்வரத்தில் அருகே  சன்னாபுரம் கிராமத்தில் தனியாருக்கு  சொந்தமான திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.

இந்த நெல் மூட்டைகள் மீது தரமற்ற தார்ப்பாய்கள் கொண்டு போர்த்தப்பட்டு இருந்ததால் அவை சிறிது நாட்களிலேயே வெயிலில் காய்ந்து கிழிந்து சேதமடைந்தது.இதனால் வெட்டவெளியில் கிடந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கடந்த இரண்டு மாதமாக வெயில் மற்றும் மழையில் நனைந்து சாக்கு மூட்டைகள் கிழிந்து நெல்மணிகள் கீழே கொட்டி வீணாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் அந்த நெல் மூட்டைகள் மேலும் நனைந்து நெல்மணிகள் முளைப்புத்திறன் அடைந்ததோடு, நெல் முட்டைகள்  கருத்துப் போய் பயன்படுத்த முடியாது நிலைக்கு சென்றுள்ளது. இந்த 40 ஆயிரம் நெல் மூட்டைகளில் இருந்து கிட்டத்தட்ட 10,000 டன் நெல்கள் வீணாக கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ. 1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதி கிராமத்தின் உள் பகுதியில் அமைந்திருப்பதால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட்டதாகவும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே தாங்கள் கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் வீணடிப்பது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில், சன்னாபுரம் திறந்த வெளி நெல் கிடங்கில் பல மாதங்களாக ஆயிரக்கணக்கான மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதிகளில் உள்ளதால், எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. இதனால் பலத்த மழை பெய்ததால் நெல் மூட்டைகளின் கீழ் மழை நீரில் தெப்பம் போல் தேங்கி நின்றது. இது குறித்து அப்போதே, அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் கும்பகோணத்திலுள்ள அதிகாரிகள், ஒருவரை ஒருவர் மாறி மாறி சொல்லி அலைகழித்தனர். ஆனால் விவசாயிகள் கஷ்டப்பட்ட விளைவித்த நெல் மூட்டைகளை விலை கொடுத்து வாங்கி விட்டு, அலட்சியமாக இருந்ததால், பல கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அலட்சியமாக இருந்த கீழ் மட்ட அலுவலர்கள் முதல் உயரதிகாரிகள் வரை, நஷ்டமாகும் பணத்திற்கு உரிய இழப்பீட்டை, அவர்களிடமே வசூலிக்க வேண்டும்.அப்போது இனி வருங்காலத்தில் நடைபெறாது என்றனர்.

click me!