சேதமடைந்த சாலையை சீரமைக்காத அதிகாரிகள்; சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்….

First Published Sep 8, 2017, 7:41 AM IST
Highlights
Officers who do not repair damaged road Nattu people struggle on the road ....


கிருஷ்ணகிரி

ஓசூரில் சேறும், சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறிய போக்குவரத்து சாலையை சீரமைக்காத அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட சாலையில் நாற்று நட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி லே அவுட்டில் இருந்து பேகேப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் வரை உள்ள சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.

இதனைச் சீரமைக்காமல், அதிகாரிகள் சாலையில் மண்ணைக் கொட்டி தற்காலிகமாக அந்த குழிகளை மூடி இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்தச் சாலை தற்போது சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்தச் சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மக்கள் கூறும் குற்றச்சாட்டு.

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மக்கள் அதிகாரிகளுக்கு தங்களது அலட்சியத்தை சுட்டிக்காட்ட பேகேப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தை கையில் எடுத்தனர். சேற்றில் நாற்று நட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், “இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என மக்கள் எச்சரித்தனர்.

click me!