
வேண்டாம் என்று கிராமசபை முடிவு செய்தால் அங்கு மதுக்கடைகளை திறக்கக் கூடாது…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுக் கடைகள் திறக்கக் கூடாது என, எங்கெல்லாம் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோ அங்கெல்லாம், மதுக் கடைகளை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், குடியிருப்பு பகுதிகளில் மதுக் கடைகளை திறக்கவும், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல், போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் 500 மீட்டருக்குள் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 3000 ற்கும் மேற்பட்ட மதுக் கடைகள் அகற்றப்பட்டன. அந்த கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை திறக்க அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் அகற்றிய கடைகளை, வேறு இடங்களில் திறக்கும் போது, உள்ளூர் மக்களின் கடும் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல், அரசு திணறி வருகிறது. இதற்காக மக்கள், வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே 1-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்களது பகுதியில் மதுக்கடைகள் திறக்ககூடாது என பெரும்பாலான மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சியிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே தமிழகத்தில் திருவண்ணாமலை, சேலம், கரூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதிராக மதுக்கடைகளை திறக்கக்கூடாது .மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது, எந்தவித தாக்குதலிலும் காவல்துறை ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.