மகாதேவனின் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலா பரோல் கேட்கவில்லை எனவும் எனவே அவர் பரோலில் வெளிவர வாய்ப்பில்லை எனவும் அதிமுக அம்மா கட்சியின் கர்நாடக மாநில தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற குழு தலைவருமான சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன்.
இவர் தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.
தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, மகாதேவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாதேவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள டி.டி.வி. தினகரனும், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, தங்கமணி, எஸ்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தஞ்சாவூர் விரைந்தனர்.
இன்று மாலை தஞ்சாவூர் சென்ற அவர்கள் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா இறுதி சடங்கில் கலந்து கொள்ள பரோலில் வெளிவருவார் என செய்திகள் வெளியாகின. ஆனால் சசிகலா பரோல் கேட்கவில்லை எனவும் எனவே அவர் பரோலில் வெளிவர வாய்ப்பில்லை எனவும் அதிமுக அம்மா கட்சியின் கர்நாடக மாநில தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.