
நிலமே இல்லாத சிலருக்கு வர்தா புயலில் பயிர்கள் சேதம் அடைந்ததாக கூறி நிவாரணத் தொகை வழங்கும் பட்டியலில் அவர்களின் பெயர்களை வருவாய்த் துறை அதிகாரிகள் சேர்த்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட பென்னாலூர்பேட்டை, வெலம்மக்கண்டிகை கிராமங்களில் 800 ஏக்கரில் நெல், மரவள்ளிக் கிழங்குகளை பயிரிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் வீசிய வர்தா புயலால் அறுவடை செய்யவிருந்த நிலையில் நெல் மற்றும் மரவள்ளிக் கிழங்குகள் நாசமடைந்தன.
இந்நிலையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அரசு அறிவித்து பயிர் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, சேதம் குறித்து கணக்கு எடுக்க வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், சிலரது பெயர்களை மட்டுமே நிவாரணம் வழங்கும் பட்டியலில் சேர்த்துவிட்டு, பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளின் பெயர்களை விட்டுவிட்டனர்.
அதுமட்டுமின்றி நிலமே இல்லாத சிலருக்கு வர்தா புயலில் பயிர்கள் சேதம் அடைந்ததாக நிவாரணத் தொகை வழங்கும் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே, தற்போது பட்டியலில் நிவாரணத்திற்காக சேகரிக்கப்பட்ட பெயர்களை நீக்கிவிட்டு, உண்மையிலேயே பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெலம்மக்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.