மீண்டும் பாடப் புத்தகத்தில் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாறு? ஆட்சியரிடம் சீர்மரபினர் கோரிக்கை...

First Published Jun 12, 2018, 8:15 AM IST
Highlights
Muthuramalinganka history back on books request to collector...


தேனி
 
மீண்டும் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும் என்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தேனி ஆட்சியரிடம்  சீர்மரபினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தனர். 

அந்த மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க சீர்மரபினர் நலச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாறு இடம் பெற்று இருந்தது. 

தற்போது புதிய பாடப் புத்தகத்தில் முத்துராமலிங்கத்தேவர் வரலாறு அகற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

மீண்டும் ஆறாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

அதேபோன்று, பெரியகுளம் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். அவர்களில் சிலர் வெற்றுக் குடங்களை எடுத்து வந்தனர். 

ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில், "எங்கள் ஊருக்கு குடிநீர், சாலை வசதி, பொதுக்கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. 

அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தும் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. 

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தோட்டங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்துகிறோம். எனவே, எங்கள் கிராமத்துக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

அதேபோன்று, ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்கள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அல்லல்படுகிறோம். 

குடங்களை எடுத்துக் கொண்டு தோட்டம், தோட்டமாக அலைந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். எனவே, குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

click me!