குழந்தைக்கு பால் கொடுத்த தாய் மர்ம மரணம்; காரணம் தெரியாமல் போலீஸ் திணறல்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 14, 2018, 10:30 AM IST
Highlights

குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். 

குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய் மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். தாய் இறந்ததற்கு காரணம் என்ன? என்று போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரிச் சமத்துவபுரத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் முத்துராஜ் (25). இவரது மனைவி சத்யா (20). இத்தம்பதிக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் கணவருடன் இருந்த சத்யா தனது குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கும்போது  சத்யா திடிரென  மயக்கம் அடைந்தார். கீழே சரிந்த சத்யாவைப் பார்த்து கணவர் முத்துராஜ் பதறிப் போனார். பின்னர், சத்யாவை எழுப்ப முயற்சித்தும் பலனில்லை. 

பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியோடு சத்யாவை திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார் முத்துராஜ். அங்கு பரிசோதித்துக் கொண்டிருந்தபோதே சத்யா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கணவர் முத்துராஜிடம் தெரிவித்தபோது அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் பத்மகுமாரி மற்றும் காவலாளர்கள் மருத்துவமனை விரைந்தனர். அங்கு சத்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது தாய் இறந்தது எப்படி? என்று காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  திருமணமான ஒரு வருடத்தில் சத்யா இறந்ததால் தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரசாந்த் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். 

குழந்தைக்கு தாய்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த தாய் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாத குழந்தை தாயின்றி வாடுமே! என்று அக்கம்பக்கத்தினர் வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்.

click me!