கிராமத்தையே காலி பண்ணி மக்களை தலை தெறிக்க ஓட வைத்த ஒரே ஒரு குரங்கு...

By Muthurama LingamFirst Published Feb 1, 2019, 5:02 PM IST
Highlights

வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு யாராவது சேட்டை செய்தால் அதை சுருக்கமாக குரங்கு சேட்டை என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அதையும் தாண்டி கொடூரமாக சேட்டை செய்த குரங்கு ஒன்றால் ஒட்டுமொத்த கிராமமே அஞ்சி நடுங்கி ஊரையே காலி செய்திருக்கிறது.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு யாராவது சேட்டை செய்தால் அதை சுருக்கமாக குரங்கு சேட்டை என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அதையும் தாண்டி கொடூரமாக சேட்டை செய்த குரங்கு ஒன்றால் ஒட்டுமொத்த கிராமமே அஞ்சி நடுங்கி ஊரையே காலி செய்திருக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரை மேடு ஊராட்சி தென்னலக்குடி கிராமம் கன்னிக்கோயில் தெருவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் கடந்த 1 மாதமாக எங்கிருந்தோ வந்த ஒரு ஆண் குரங்கு வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்து செல்லத் தொடங்கியது. அதைத் தடுக்க முயன்றவர்களை அக்குரங்கு பார்த்த பார்வை திகிலடையச்செய்தது.

மக்கள் பயந்து நடுங்குவதைக் கண்டு அடுத்தடுத்து அசால்ட் பண்ண ஆரம்பித்த அந்தக் குரங்கு முதலில் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அடுத்து ஆட்களையும் கடித்து வைக்க ஆரம்பித்தது. சுமார் ஒரு மாத கால கடத்துக்குள் கடி வாங்கியவர்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டியது.

இதனால் வெறுத்துப் போன கிராம மக்கள் நேற்று உடைமை பொருட்களான உடைகள், பாய், தலையணை ஆகியவற்றை மூட்டை கட்டிக் கொண்டு வீடுகளை பூட்டி விட்டு ஊரை காலி செய்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கன்னிக்கோயில் தெரு அருகேயுள்ள கோவிலில் தஞ்சம் புகுந்தனர். மேலும் குரங்கை பிடித்து அப்புறப்படுத்தும் வரையில் கோயிலிலேயே தங்க உள்ளதாகவும் தெரிவித்து அங்கேயே உணவு தயாரித்து சாப்பிட்டு வருகின்றனர்.

இதுகுறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட வனத்துறை ஊழியர்கள் குரங்கைப் பிடிக்க தனி வலை, கூண்டுகள் அமைத்து முயற்சித்தது தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது. அதிகாரிகள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தலையைச் சொரிந்துவருகிறார்கள்.

மனிதர்களை கடித்து வைக்கும் இந்தக் குரங்குக்கு இதற்கு காரணமாக எதாவது ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அதைக்கண்டுபிடித்துக் கதைபண்ணி ஒரு தமிழ்ப் படம் எடுத்தால் ‘பேட்ட’, ‘விஸ்வாச’ வசூலைத் தாண்டி ஒரு ஹிட்டடிக்கும். யாராவது செய்வார்களா?

click me!