
Tamil Nadu CM statement on Gaza : இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த போர் 15 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இசுரேல் காசாவின் பெரும்பகுதியைத் தரைமட்டமாக்கியது, 19 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். ஏராளமான குழந்தைகள், பெண்கள் உயிரிழந்தனர். பசியால் குழந்தைகள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே காசா மீதான தாக்குதலை நிறுத்த உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகிறது. இந்த நிலையில்காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், உயிருக்குப் போராடும் காசா, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது!
காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சைப் பதறச் செய்கிறது. பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும்,
எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது. அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும். உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்வதாக ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.