தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த எந்த கடைகள் என ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
500 மதுபான கடைகள் மூடப்படும்
தமிழகத்தில் மது விற்பனையால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தற்போது 5ஆயிரத்து 329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளது. டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாய் 2021-22ல் 36,056 கோடி ரூபாய் கிடைத்தது. 2022-23 ஆம் ஆண்டில் 44ஆயிரத்து 098 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 5329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
காலம் தாழ்த்துவது ஏன்.?
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபான கடைகள் துறை சார்பாக மூடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், கோவில்களில் அருகில் இருக்கக்கூடிய கடைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில் கலைஞர் நூற்றாண்டு விழா தினத்தன்று 500 கடைகள் மூடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வரை எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு எதிர்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, மதுக்கடைகளை மூடுவதில் கால தாமதம் ஏற்படுவதற்கு கணக்கெடுப்பு தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. 5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை 53 நாட்களாகியும் தமிழக அரசால் தயாரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லையா என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒரு வாரத்தில் அறிவிப்பு
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார். பட்டியல் தயாரானதும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என கூறினார். மேலும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொறுத்துவதற்கான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,
இதையும் படியுங்கள்