புகார் வந்தால் நடவடிக்கை… உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்!!

By Narendran SFirst Published Jan 13, 2022, 10:48 PM IST
Highlights

பேருந்து வழித்தட உணவகங்களில் தரமற்ற நிலையிலும், விலை அதிகமாகவும் உணவு வழங்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பேருந்து வழித்தட உணவகங்களில் தரமற்ற நிலையிலும், விலை அதிகமாகவும் உணவு வழங்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், திருப்பதி ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 11 ஆம் தேதி முதல் 12,865 பேருந்துகளில் 5.74 லட்சத்துக்கு மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறப்பு  பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயணிகள் எந்த பிரச்சனையும் இன்றி பயணிக்க, டிக்கெட் கிடைக்கவில்லை என வருந்தாத அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 11 ஆம் தேதி முதல் 12,865 பேருந்துகளில் 5.74 லட்சத்துக்கு மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். பயணியர் கூட்டம் அதிகரித்தால் பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பேருந்துகளில் பயணிக்க 89 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்தனர். தீபாவளியை விட பேருந்து நிலையங்களில்  அதிகம் கூட்டம் காணப்படுகிறது. 75 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், ஒரு சில பேருந்துகளில் மட்டுமே பயணிகள் நின்று பயணிக்கும் நிலை இருக்கிறது. 

ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்குள், காணாமல் போய் விடுகிறது. குளிர் காலத்தில் கொரோனா அதிகமாகத்தான் இருக்கும். பேருந்து வழித்தட உணவகங்களில் தரமற்ற நிலையிலும், விலை அதிகமாகவும் உணவு வழங்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், அதிகமானோர் ஆம்னியில் பயணிக்கவில்லை. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் பேருந்து இயக்கப்படாது. பொங்கல் முடிந்து திரும்புவோருக்கு 17 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்கப்படும். ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும்,  சனிக்கிழமை இரவு முறையாக பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து சேரலாம் என்று தெரிவித்தார்.

click me!