நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் நாளை தொடங்குவதாக இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும் என ஏற்கனவே உயர்க்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த பொறியியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க 1,69,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. இதனால் விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து பொறியியல் கலந்தாய்விற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட இருப்பதாக தகவல் கடந்த ஒரு சில தினங்களாகவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு முடிவு
இந்தநிலையில் விழுப்புரத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாளை தொடங்குவதாக இருந்த பொறியியல் படிப்பிற்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக கூறினார்.நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவே நாளை தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்களுக்குப் பிறகு கலந்தாய்வு தொடங்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, காலியிடங்களைத் தடுக்கவும் மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தைத் தடுக்கவும், கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக கூறினார். மேலும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால், கூடுதல் இடங்களை அதிகரிக்க தமிழக முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்