தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்!!

By Narendran SFirst Published Nov 11, 2022, 5:47 PM IST
Highlights

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் (10-11-2022) தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 12.15 மி.மீ. மழை பெய்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இறந்த நபரது குடும்பத்திற்கு ரூ.4.00 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக நேற்று (10-11-2022) 20 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 40 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கான வானிலை முன்னறிவிப்பு

  • 11-11-2022 அன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 
  • 12-11-2022 அன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 
  • 13-11-2022 அன்று கனமழை பெய்யக்கூடும். 
  • 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
  • பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 906 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன. 

இதையும் படிங்க: கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின் !

தமிழகத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உள்ளது என்றும், இது மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி 12-11-2022 முதல் 13-11-2022 வரை நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 10-11-2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 12-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு. திருவண்ணாமலை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர். திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

13-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், ஈரோடு. கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு. திருவண்ணாமலை. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம். திருவாரூர். சிவகங்கை, ராமநாதபுரம். விருதுநகர். தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

14-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர். திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான முன்னறிவிப்பு

11-11-2022 மற்றும் 12-11-2022 அன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிமனை, தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 13-11-2022 அன்று குமரிமுனை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உதவுவது போல் நடித்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை… கல்லூரி பேராசிரியர் கைது… வீடியோ வெளியானதால் பரபரப்பு!!

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் எதிர்கொள்ள தேவையான தொடர்ந்து கனமழையினை அனைத்து திறம்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் 42 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதத் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் நிலைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. 1-10-2022 முதல் 10-11-2022 வரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 497 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதில் 437 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 60 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!