
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் ஒரு மணி நேரம் நீட்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி என்றதுமே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடைகள், புதிய பலகாரங்கள்தான். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு அலாதி பிரியம். தீபாவளி அன்று புதிய ஆடைகளை அணிவதிலும் அவர்களுக்கு சந்தோஷம்தான்.
தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில், வெளியூர் சென்று வேலை பார்ப்பவர்கள், தங்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஊர் திரும்புவதில் உற்சாகம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ழந்தைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் புது துணிகள், பட்டாசுகள் உள்ளிட்டவைகள் வாங்குவதில் பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைக்காக வெளியூர்களுக்கு சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக அதிக அளவிளான பேருந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக பேருந்து நிலையங்களும் தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தீபாவளி பொருட்களை வாங்க சென்னையில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல் ரயில் நிலையங்கங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டுள்ளது.
மக்கள் வசதிக்காக அதிக அளவில் பேருந்துகளை இயக்குவதுபோல், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும், ரயில் சேவையை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
அக்டோபர் 16, 17 ஆம் தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு மணி நேரம் நீட்டித்து மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், அக்டோபர் 19 மற்றும் 20 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயட்ககப்பட உள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.