Book Fair: மாபெரும் புத்தக கண்காட்சி..இனிதே தொடக்கம்..மாவட்டந்தோறும் நடத்த திட்டம்.. முதலமைச்சர் பேச்சு..

By Thanalakshmi VFirst Published Feb 16, 2022, 7:52 PM IST
Highlights

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று 45-வது புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அரங்குகளை பார்வையிட்டார். விழாவில், 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜனவரி 6-ஆம் தேதி புத்தக கண்காட்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா பொருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்த கட்டுப்பாடுகளால் பொருட்காட்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தொற்று பரவல் குறைந்ததைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு புத்தக கண்காட்சி நடத்த அனுமதி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, பபாசி பிப்ரவரி 16-ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக்கண்காட்சி தொடங்கும் என அறிவித்திருந்தது.
அதில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியிலிருந்து 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தக கண்காட்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். விழாவில், 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய அவர், மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும். மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படுகிறது என்றார்.

மேலும் செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்போது ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து, மாநில பாடலாக ஆக்கப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட நூலகங்களில் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராவதற்காக ரூ.2.35 கோடியில் ஆங்கில இதழ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தமிழின் அடையாளமாக திகழும் நுல்கள் திராவிட மற்றும் ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும் என்றும் அவர் பேசினார். மேலும், திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம் என்றும், திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம் என்றும் கூறிய அவர், ஆண்டாண்டுகளாக அடிமைபடுத்தப்பட்டிருந்த தமிழ் சமூகத்திற்கு புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்தது திராவி இயக்கம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்த புத்தக கண்காட்சி இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டும் மற்றவர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் நுழைவுச் சீட்டும் வழங்கப்படுகிறது. மேலும், Bapasi.Com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!