
ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கமும், மல்யுத்த போட்டியில் சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதேபோல் பாராலிமபிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா, உயரம் தாண்டுதலில் மாரியப்பன் உள்ளிட்டோர் பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு அளிக்க மத்திய விளையாட்டு துறை விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.
இன்று நடைபெற்ற விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் கலந்து கொண்டார். அப்போது, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் பங்கேற்க முடியாத வீரர்களின் உறவினர்களிடம் காசோலைகள் வழங்கப்பட்டன. பின்னர் பேசிய மத்திய அமைச்சர், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பாராலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் பேசும்போது, மத்திய - மாநில அரசுகள் அளிக்கும் நிதியுதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.