
கோயம்புத்தூர்
காஷ்மீர் சிறுமி படுகொலையை கண்டித்து கோயம்புத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை கொன்றவர்களின் உருவ பொம்மையை தூக்கில் இட்டனர்.
காஷ்மீரில் 8 வயது சிறுமியான ஆஷிபா, கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோயம்புத்தூர் மாவட்டம், ஆத்துப்பாலத்தில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதற்கு கிணத்துக்கடவு பகுதி செயலாளர் ஏ.ஹாரூண் ரஷீத் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அப்துல்பசீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ், பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், "சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் உருவபொம்மைகளை ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் தூக்கில் தொங்கவிட்டு இருந்தனர்".
இதில், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உருவப்படத்தை கைகளில் ஏந்தி ஊர்வலமாகவும் வந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "சிறுமியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர்.
தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.