
நாமக்கல்
நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இருவரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே கொன்னையாறு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (52), கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று காலையில் திருச்செங்கோடு அருகே குமரமங்கலம் பிரிவு சாலையில் நடந்துச் சென்றார்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் நடந்து சென்ற பன்னீர் செல்வத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினர். மேலும், அவரிடமிருந்து ரூ.1000 மற்றும் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பன்னீர்செல்வம் திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் பால்மடை என்ற இடத்தில் காவலாளர்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து காவலாளார்கள் விசாரித்தனர். இதில் அவர்கள், எடப்பாடி எட்டிக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகேசன் (32), எடப்பாடி அருகே கன்னந்தேரி பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி துரை (29) ஆகியோர் என்பதும், தெரியவந்தது. இவர்கள்தான் பன்னீர்செல்வத்திடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவலாளர்கள் அவர்களிடம் இருந்து 20 சவரன் நகை, மோட்டார் சைக்கிள், கத்தி, செல்போன், ரூ.1000 ஆகியவற்றை கைப்பற்றினர்.
இவர்கள் திருச்செங்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் வழிப்பறி மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது காவலாளர்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.