
மோடிக்கு எதிராக கார்ட்டூன்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், அனுமதியின்றி கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தப்படுவார்கள் என அறிவித்தார். அதன் படி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரை அமெரிக்கா ராணுவ விமானம் மூலம் கை மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டி திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கு பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபரை சந்தித்து பேசினார். இந்த சம்பவத்தை விமர்சிக்கும் வகையில் பிரபல வார இதழான ஆனந்த விகடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது.
'எங்களை காப்பாற்றுங்கள்' கதறும் இந்தியர்கள்! கைவிட்ட அமெரிக்கா! கண்டுகொள்ளாத இந்தியா!
ஆனந்த விகடன் இணையதளம் முடக்கம்
இதற்கு எதிப்பு தெரிவித்த பாஜகவினர் மத்திய அரசிடம் புகார் அளித்திருந்தனர். இதனையேற்று ஆனந்த விகடன் இணையதளம் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முடக்கப்பட்டது. தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
கார்ட்டூனை பிளாக் செய்ய அறிவுரை
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆனந்த விகடன் இணையதளம் முடக்கப்பட்டது ஊடக சுதந்திரத்திற்கு பறிக்கும் செயல் என வாதிடப்பட்டது. மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிட்டார்.
இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் கார்ட்டூன் படத்தை அழித்தால் இணையதள முடக்கம் செய்ததை நீக்க பரிசீலனை செய்யப்படும் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தினார்.