காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி மற்றும் காதலன் விஷம் குடித்தனர். காதலி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தக்கலை அருகே குமாரகோவிலை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் விக்னேஷ் டிப்ளமோ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விக்னேஷின் பக்கத்து வீட்டுப் பெண் அனுசுயா, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விக்னேசுக்கும், அனுசுயாவுக்கும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விக்னேஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதன் பிறகு காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வைத் தகராறு, கைகலப்பாக மாறி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று அனுசுயா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். இதனை அறிந்த விக்னேஷ், அனுசுயா வீட்டுக்கு சென்றார். இதனை ஒரு சிலர் பார்த்ததாக தெரிகிறது. காதலி வீட்டுக்கு சென்ற விக்னேஷ் அவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, காதலில் தான் ஒன்று சேர முடியவில்லை, சாவிலாவது ஒன்றிணைவோம் என்று முடிவெடுத்தனர். பின்னர் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதற்கிடையே அனுசுயாவின் உறவினர்கள் அங்கு வந்தனர்.
வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு விஷம் குடித்த நிலையில் விக்னேசும், அனுசுயாவும் உயிருக்கு போராடினர். உடனே இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்க சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அனுசுயா, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடி விஷம் குடித்ததில் காதலி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.