பள்ளி வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ஓட்டுனர் உரிமம் ரத்து – ஆட்சியர் அதிரடி உத்தரவு…

First Published May 20, 2017, 6:41 AM IST
Highlights
license will be canncel if school drivers use cellphones while driving


நாகப்பட்டினம்

பள்ளி வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நாகப்பட்டினம் ஆட்சியர் பழனிசாமி அதிரடியாக தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் நாகை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இந்த ஆய்வு குறித்து அவர் கூறியது:

“பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி அனைத்துப் பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்படுகிறது.

இதில் பள்ளி வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பான்கள், இருக்கைகள், மாணவர்களின் புத்தகப் பைகள் வைக்கும் இடங்கள், வாகனத்தின் தளம், ஏறி இறங்கும் படிக்கட்டுகள் மற்றும் கதவுகள், அவசர வழி கதவுகள், ஓட்டுநரின் தகுதி, உரிமம் மற்றும் அவரது அனுபவம், உதவியாளரின் தகுதி, வாகனத்தின் அனுமதி சான்று, நடப்பில் உள்ள காப்பீட்டுச் சான்று, மாசுக் கட்டுப்பாட்டு தரச்சான்று போன்றவைகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தில் 91 வாகனங்களில் 76 வாகனங்கள் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 66 வாகனங்கள் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்டன. 10 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளன.

தகுதியிழப்பு செய்யப்பட்ட வாகனங்கள் குறைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகுதிச்சான்று பெற வேண்டும்.

பள்ளி வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று அதிரடியாகக் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக், உதவி ஆட்சியர் கண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் போன்றோர் உடனிருந்தனர்.

click me!