
ஈரோடு
ஈரோட்டில் உள்ள பர்கூர் மலைக் கிராமத்தில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தைப்புலி மீண்டும் மூன்று ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது. மனிதர்களை தாக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பொதுமக்கள்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட மலை கிராமப் பகுதிகளில் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு துருசனாம்பாளையம் பள்ளத்து தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொம்மனின் மூன்று ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.
இந்த நிலையில், பர்கூர் மலைப் பகுதிக்கு உள்பட்ட பெஜில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தையன் (30). இவர் 12–க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
ஆடுகளை மேய்த்துவிட்டு எப்பவும் வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினமும் அவ்வாறே செய்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பட்டியில் இருந்து ஆடுகள் சத்தம்போட்டு அலறின.
இதனால் தூக்கத்தில் இருந்தூ விழித்துக்கொண்ட சித்தையன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஆட்டுப் பட்டியில் கட்டப்பட்டிருந்து ஒரு ஆட்டை சிறுத்தைப்புலி கடித்து குதறிக்கொண்டிருந்தது.
இதனால் அதிர்ந்துபோன சித்தையன் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் உள்ளேயே இருந்துவிட்டார். அதன்பின்னர் காலை 6 மணியளவில் மற்ற விவசாயிகளுக்கு செல்போன் மூலம் சித்தையன் தகவல் கொடுத்ததால் விவசாயிகள் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர், சித்தையன் ஆட்டுப் பட்டிக்கு சென்றுப் பார்த்தார். அப்போது அங்கு மூன்று ஆடுகளை சிறுத்தைப்புலி கழுத்தில் கடித்து கொன்றதை கண்டார்.
இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். கால்நடை மருத்துவர் சுரேஷும் வந்தார். அவர்கள் சிறுத்தைப்புலி கடித்துக்கொன்ற செம்மறி ஆடுகளின் உடலை பார்வையிட்டனர்.
கால்நடை மருத்துவர் சுரேஷ், இறந்த செம்மறி ஆடுகளின் உடலை உடற்கூராய்வு செய்தபின்னர், அந்த மூன்று செம்மறி ஆடுகளின் உடல்களும் அங்குள்ள வனப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
சிறுத்தைப்புலி மலை கிராமத்தில் புகுந்து செம்மறி ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அந்தப் பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள், "இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமாக உள்ளது. மனிதர்களை சிறுத்தைப்புலி அடித்துக் கொல்லும் அபாயம் உள்ளது. எனவே, பர்கூர் மலைப்பகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சுற்றித் திரியும் சிறுத்தைப்புலியை கூண்டு அமைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டனர்.